தம்பி ராமச்சந்திரா, நீ எனக்குப் பணமாத் தராம காசா மாத்திக் கொடு..
சினிமா
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு ‘தம்பி ‘நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன். அதனால் என்னை வந்து பார்த்துவிட்டுப் போ’ என்று எழுதினார்.
கலைவாணரைப் பார்க்க எம்.ஜி.ஆர். வரும்போதெல்லாம் நிறையப் பணக் கட்டை அவர் படுக்கைக்குக் கீழ் வைத்துவிட்டுச் செல்வார். ஏனெனில் பலருக்குக் கொடுத்துச் சிவந்த கரங்கள் தனது ஏழ்மைக்காகப் பிறரிடம் கைநீட்டக் கூடாது என்ற உயரிய நோகத்துடனே எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்த மக்கள் திலகம் இவ்வாறு செய்தார்.
இதனைப் பார்த்த கலைவாணர், எம்.ஜி.ஆரைப் பார்த்து, “தம்பி ராமச்சந்திரா, நீ எனக்குப் பணமாத் தராம காசா மாத்திக் கொடு. இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்ப தான் அதை நான் தர முடியும்” என்று கூறினார். இதனைக் கேட்ட மக்கள் திலகம் நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டார். தன்னைப் பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம் என்.எஸ்.கே.
‘தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று அடிக்கடி தம்மைப் பார்க்க வரும் எம்.ஜி.ஆரிடம் கலைவாணர் கூறுவாராம் .
( விழா ஒன்றில் மக்கள் திலகம் எம்ஜியார் , கலைவாணர் , ஜெமினி வாசன் , பின்னால் நிற்பவர்கள் இயக்குனர் கே.சுப்பிரமணியம் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் )
Chandran Veerasamy






















