• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அகதிகளின் துயரத்தை அதிகரிக்கும் வகையிலான கனடா அரசின் நடவடிக்கை

கனடா

அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் துயரத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கை ஒன்றை எடுக்க இருக்கிறது கனடா அரசு.

ஆம், மே மாதம் 1ஆம் திகதி முதல், இடைக்கால ஃபெடரல் சுகாதார திட்டம் என்னும் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளது கனடா அரசு. 

கனடாவின் இடைக்கால ஃபெடரல் சுகாதார திட்டம் (IFHP) என்பது, மாகாண அல்லது தனியார் காப்பீடு இல்லாத, அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் கனடாவின் மருத்துவ திட்டங்கள் வழங்கப்படாத குறிப்பிட்ட சில குழுக்களுக்கு தற்காலிக சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் திட்டமாகும்.

ஆனால், மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து, IFHP திட்டத்தின் கீழ் மருத்துவ உதவி பெறுவோர், ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கும் 4 டொலர்கள் கட்டணம் செலுத்தவேண்டும்.

அத்துடன், பல் மற்றும் கண் பராமரிப்பு, மருத்துவ ஆலோசனை பெறுதல் போன்ற கூடுதல் சேவைகளுக்கான செலவில் 30 சதவீதத்தையும் அவர்கள் செலுத்த வேண்டும். 

அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்பினரும் சுகாதார ஊழியர்களும் பேரணிகள் நடத்தியுள்ளார்கள்.

ரொரன்றோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய குடும்ப சுகாதார மருத்துவரான ரித்திகா கோயல், நம் நாட்டில் ஒரு உலகளாவிய சுகாதார அமைப்பு இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம், நலிவடைந்த மக்களையும் புலம்பெயர்ந்தோரையும் பாதிக்கும் ஒரு அமைப்பை நாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் ஆதரிக்க விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார் அவர். 
 

Leave a Reply