அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே எபோலா பரவல் தொடங்கிவிட்டது - உலக சுகாதார மையம்
காங்கோவில் வேகமாக பரவி வரும் எபோலா பாதிப்பு, அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
கிழக்கு காங்கோவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சுகாதார பணியாளர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வேகமாக பரவும் எபோலா பாதிப்பு, மே மாத மத்தியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் முகமது யாகூப் ஜனபி செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, மரபணு வரிசைமுறை ஆய்வு மூலம் இந்த பாதிப்பு தொடங்கிய காலம் கண்டறியப்பட்டதாக கூறினார். ஆரம்பக்கட்ட பாதிப்புகளில் சில, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற பிற நோய்களால் ஏற்பட்டவை என்று தவறாக கருதப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"நாங்கள் வைரஸ்-ஐ துரத்தி கொண்டிருக்கிறோம், ஆனால் வைரஸ் நம்மை விட முன்னால் சென்று கொண்டிருக்கிறது," என்று ஜனபி கூறினார்.
எபோலா தடுப்பு நடவடிக்கைகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் டாக்டர் தியர்னோ பால்டே கூறும் போது, காங்கோவின் தேசிய உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் ஆய்வு துறை தலைவர் டாக்டர் ஸ்டீவ் அஹுகா தலைமையில் இந்த மரபணு வரிசைமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தப் பாதிப்பில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா நோயாளிகளின் எண்ணிக்கை 4,200-ஐ எட்டியுள்ளது; இதில் 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எபோலா வைரஸ் காற்று வழியாக பரவாது என்பதால், சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ்களை விட இது பரவுவது மிகவும் கடினம். எனவே, இதன் உலகளாவிய பரவல் அபாயம் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மே 15-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்த பாதிப்பு, முந்தைய எபோலா பாதிப்புகளில் இருந்து மாறுபட்டது. ஏனெனில், இதற்கு காரணமான அரிதான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ்-க்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லை.
ஆரம்பக்கட்ட சோதனைகள் மிகவும் பொதுவான வகை எபோலா வைரஸ்க்காக மேற்கொள்ளப்பட்டதே தாமதத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.






















