பண மோசடி வழக்கு - மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டு சிறை
மலேசியாவில், 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக் (72). இவர் தன் பதவிக்காலத்தில், 1 எம்.டி.பி. எனப்படும், 'ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம்' என்ற அரசு நிறுவனத்தை தொடங்கினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
இந்நிறுவனத்தின் நிதியில் இருந்து 4,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரசாக் மாற்றியதாக புகார் எழுந்தது. அவர்மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் கோடி அபராதம் விதித்தது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே மற்றொரு வழக்கில் நஜிப் ரசாக் 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.






















