• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விண்வெளி திட்டத்தில் மஸ்க்கின் அதிரடித் திட்டம் - 10 ஆண்டுகளில் நிலவில் சுயமாக இயங்கும் நகரம்

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைவருமான ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு முன்னதாக நிலவில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்கும் தனது புதிய இலக்கை அறிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் "சுயமாக இயங்கும் நகரம்" ஒன்றை அமைப்பது சாத்தியம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதை விட நிலவிற்குச் செல்வது மிகவும் இலகுவானது மற்றும் விரைவானது என மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல 6 மாதங்கள் தேவைப்படும் நிலையில், நிலவை வெறும் 2 நாட்களில் சென்றடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கு 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே விண்கலங்களை அனுப்ப முடியும். ஆனால் நிலவிற்கு ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை விண்கலங்களை அனுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிலவில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி ஓக்சிஜன், நீர் மற்றும் கட்டுமானப் பொருட்களை அங்கேயே தயாரிப்பதே மஸ்க்கின் பிரதான திட்டமாகும்.

இது "அறிவியல் புனைகதை" போலத் தோன்றினாலும், தத்துவார்த்த ரீதியாகச் சாத்தியமானது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பிரிட்டனின் சர்ரே பல்கலைக்கழக விரிவுரையாளர் சுங்வூ லிம் இது குறித்துக் கூறுகையில், நிலவின் மண்ணைப் பயன்படுத்தி வளங்களைத் தயாரிப்பது பூமியில் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை ஒத்ததுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நிலவின் கடுமையான வெப்பநிலை மற்றும் தூசு நிறைந்த சூழலில் இவை எவ்வாறு செயற்படும் என்பதே பெரும் சவாலாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2027 மார்ச் மாதத்தில் நிலவில் ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது. நாசாவின் 'ஆர்டெமிஸ்' திட்டத்திலும் ஸ்பேஸ்எக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அத்துடன், விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தரவு மையங்களை அமைக்கும் லட்சியத்தையும் மஸ்க் கொண்டுள்ளார்.

நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே தனது முதன்மையான முன்னுரிமை எனத் தெரிவித்துள்ள மஸ்க், செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு நிலவு ஒரு "படிக்கல்லாக" அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply