30 விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு
இலங்கை
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் வீசிய புயலால் வாழ்வாதாரத்தை இழந்த 30 விவசாயிகளுக்கு, மேட்டு நிலப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் நிலக்கடலை விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மன்னார் பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் பயிற்சி மண்டபத்தில், நேற்று மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
விதைகள் வழங்கும் நிகழ்விற்கு முன்னதாக, விவசாயிகளுக்குத் தெளிவான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் விசேட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மன்னார் மாவட்ட விவசாய பாடவிதான உத்தியோகத்தர் . ஜெஸ்மன் மார்க் பயிற்சிகளை வழங்கினார்.
பயிற்சியின் நிறைவில் தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கும் நிலக்கடலை விதைகள் கையளிக்கப்பட்டன.
இதன் போது மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகளை வழங்கி வைத்தனர்.























