வளைகுடா போர் பதற்றங்கள் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் உலகளாவிய பணவீக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
ஜப்பானிய நிதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டு, அது இந்த ஆண்டின் பெரும்பகுதி வரை நீடிக்குமானால், உலகளாவிய பணவீக்கம் 40 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கும். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய மோதல்களால் உலகப் பொருளாதாரத்தின் தாங்குதிறன் மீண்டும் ஒருமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பூகோள அரசியல் சூழலில் எரிசக்தி பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விடயமாக மாறியுள்ளதாகவும், நாடுகள் தத்தமது பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.























