யாழ்ப்பாணத்தில் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு
இலங்கை
நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஓட்டுமடம் சந்தியிலிருந்து வட்டுக்கோட்டை நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று இரவு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில், வாளை ஏந்திய நபர் ஒருவர் மற்றொரு இளைஞரை துரத்திக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தன்னை துரத்திவந்த நபரிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்த இளைஞன், பள்ளிவாசலுக்குள் புகுந்து அங்குள்ள மதிலைக் கடந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது, வாளுடன் வந்த சந்தேகநபரை பள்ளிவாசலில் இருந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்துள்ளனர். எனினும் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி குறித்த சந்தேகநபர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.





















