ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் குறையுமா? - ஈரான் தளர்வு குறித்து சர்வதேச கவனம்
அமெரிக்காவுடனான மோதலைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக, ஹோர்முஸ் நீரிணையின் ஓமான் பக்கமாக கப்பல்கள் தாக்குதல் அச்சமின்றி தடையின்றி பயணிப்பதை அனுமதிப்பது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெஹ்ரான் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் குறுகிய பகுதியில் ஓமான் நாட்டின் கடல் எல்லைக்குள் இருக்கும் பாதையை கப்பல்கள் பயன்படுத்துவதற்கு எவ்வித இடையூறும் செய்யப்போவதில்லை என்று ஈரான் தரப்பு பேச்சுவார்த்தையில் முன்மொழிந்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான உடன்படிக்கை எட்டப்பட்டால் மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்; இந்த முன்மொழிவை ஈரான் முன்வைத்தாலும், அங்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் கண்ணிவெடிகளை ஈரான் அகற்றுமா அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கும் இந்த அனுமதி கிடைக்குமா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.





















