• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்

இலங்கை

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலக பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின்னர், ஜனாதிபதி அலுவலக பணியாளர்கள் புத்தாண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர்,  பணியாளர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களுடன் சுமூகமாக உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கடந்த ஆண்டின் தவறுகள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்த்து, புதிதாக சிந்தித்து புதிய மனப்பாங்குகளுடன் முன்னேறிச் செல்வதற்குப் புத்தாண்டுப் பிறப்பு ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

அதன்படி, நாட்டின் பிரதான அரச நிறுவனம் என்ற வகையில் ஜனாதிபதி அலுவலகம் கடந்த ஆண்டில் ஆற்றிய பணிகளை மீளாய்வு செய்து, அந்த அனுபவங்களுடன் புத்தாண்டில் திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், இதுவரை ஆற்றிய பணிகளுக்காக பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான கபில ஜனக பண்டார, ரோஷன் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply