இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு
இலங்கை
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) காலை இலங்கை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.
கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்த துணை ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் மக்கள் ரீதியிலான பரஸ்பரத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.
பிரதமரால் வழங்கப்பட்ட மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் பொதுவான நாகரிக மரபுகள் மற்றும் கலாசாரப் பிணைப்புகள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
முன்னதாக, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த துணை ஜனாதிபதி, இந்தியாவின் ‘அயலவருக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கையுடனான உறவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய வீட்டுத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
பொதுவான வரலாறு மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையில் பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9:30 மணியளவில் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி, நாளை (20) வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மிக முக்கியமான உயர்மட்ட விஜயமாக இது பார்க்கப்படுகிறது.





















