• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது

இலங்கை

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 42 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான பயணிகள் இருவரும், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலுள்ள, அறிவிப்பதற்கு ஏதுமற்ற பொருட்களைக் கொண்டு செல்வோர் பயன்படுத்தும் பசுமைப் பாதை ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற போதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 53 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன,

சீன நாட்டவர் ஒருவரால் சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த சிகரெட்டுகள், கம்போடியா ஊடாக மலேசியாவின் கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அங்கிருந்து மலேசிய எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பின்னர், இவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்வதற்காக குறித்த பங்களாதேஷ் பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 28,400 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 412 சிகரெட் பொதிகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply