புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை
இலங்கை
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக அனுப்பப்படும் தீங்கிழைக்கும் “apk” கோப்புகள் மூலம் நடத்தப்படும் ஒரு அபாயகரமான புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.
பொலிஸாரன் கூற்றுப்படி, இந்தக் கோப்புகள் பெரும்பாலும் திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டண ரசீதுகள் அல்லது லொட்டரி அறிவிப்புகள் போல சித்தரிக்கப்படுகின்றன.
அவற்றைக் கிளிக் செய்தவுடன், அவை கைபேசிகளில் தீங்கு விளைவிக்கும் மென்பொருளை நிறுவிவிடுகின்றன.
இது, ஹேக்கர்கள் சாதனத்தின் திரையைக் கட்டுப்படுத்தவும், வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட இரகசிய ஒருமுறை கடவுச்சொல் (OTP) குறியீடுகள் உள்ளிட்ட SMS செய்திகளைப் படிக்கவும் அனுமதிக்கிறது.
எனவே, சந்தேகத்திற்கிடமான “apk” கோப்புகள் நண்பர்களிடமிருந்து வந்ததாகத் தோன்றினாலும், அவற்றை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ கூடாது என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
செயலிகளைப் பெற எப்போதும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரைப் பயன்படுத்துங்கள்.
தாங்கள் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கும் எவரும் உடனடியாகத் தங்களது வங்கிக் கணக்குகளை முடக்கி, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கணினி குற்றப் பிரிவிலோ இதுகுறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் பொலிஸார் மேலும் அறிவுறுத்தினர்.





















