சம்மாந்துறையில் இரவு நேர உணவகங்கள் மீது திடீர் சுகாதாரச் சோதனை
இலங்கை
சம்மாந்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை இலக்கு வைத்து இன்று (27) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் சோதனை நடவடிக்கைகள் நான்கு விசேட குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மொத்தமாக 42 உணவகங்கள் மற்றும் டெஸ்ட் கடைகள் இதன்போது பரிசோதிக்கப்பட்டுள்ளன.
சோதனைகளின் போது சுகாதார விதிமுறைகளை மீறி, அசுத்தமான முறையில் உணவு தயாரிப்பு மற்றும் கையாளுதல் இடம்பெற்றிருந்த சில உணவகங்கள் அடையாளம் காணப்பட்டன.
அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர், உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர், மற்றும் பிரிவு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சம்மாந்துறை மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தெரிவித்தார்.























