ஈரானுக்கு உதவ ரஷ்யா தயார் - விளாடிமிர் புதின் உறுதி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்து, ஈரானுக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு Saint Petersburg நகரில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியை முன்னிட்டு, ஈரானின் நலன்களை ஆதரிக்கவும், மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும் ரஷ்யா தன்னால் இயன்ற உதவிகளை வழங்கும் என புதின் குறிப்பிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பிராந்தியத்தில் நிலைத்தன்மை மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் ரஷ்யா உறுதியாக இருப்பதாகவும், தற்போதைய சவால்களை ஈரான் வெற்றிகரமாக சமாளித்து விரைவில் அமைதியை மீட்டெடுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பாஸ் அராக்சி, பிராந்திய பிரச்சினைகள் குறித்து ரஷ்யாவுடன் தொடர்ந்து இருதரப்பு ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும், தற்போதைய போர் நிலைமை குறித்து கலந்தாலோசிக்க இந்த சந்திப்பு வாய்ப்பளித்ததாகவும் கூறினார்.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அப்பாஸ் அராக்சி, அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.






















