• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் போர் விவகாரம் - அதிபர் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுவதாக ஜே.டி. வான்ஸ் அச்சம்

தி அட்லாண்டிக் இதழின் அறிக்கை ஒன்றின்படி , ஈரானுடனான தற்போதைய மோதல், குறிப்பாக அமெரிக்க ஏவுகணை கையிருப்புகளின் நிலை குறித்து, பென்டகன் துல்லியமான தகவலகளை அளிக்கிறதா என்பது பற்றி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனிப்பட்ட முறையில் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

உளவுத்துறை மதிப்பீடுகள் மற்றும் ஆயுத பயன்பாட்டின் அளவு குறித்து வான்ஸ் மீண்டும் மீண்டும் விளக்கம் கோரியதாகவும், இவ்விவகாரத்தை அதிபர் டொனால்டு டிரம்புடன் நேரடியாக விவாதித்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டு படை தலைவர் டான் கெய்ன் ஆகியோர், ஆயுத கையிருப்பு போதுமானதாக இருப்பதாகவும், ஈரானிய படைகள் கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும் பகிரங்கமாக வலியுறுத்தி வரும் நிலையில், வான்ஸ் தனது கவலைகளை நேரடி குற்றச்சாட்டுகளாக கூறாமல், பரந்த அளவிலான மூலோபாய கேள்விகளின் ஒரு பகுதியாகவே முன்வைத்துள்ளார்.

உள் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி, ஏவுகணை இடைமறிப்பிகள் மற்றும் நீண்ட தூர தாக்குதல் அமைப்புகள் உள்ளிட்ட சில முக்கிய ஆயுதங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அமெரிக்கா ஏற்கனவே செலவழித்திருக்கக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இது தைவான், தென் கொரியா அல்லது ஐரோப்பா போன்ற பிற பதற்றமான சூழல்களுக்கான தயார்நிலை குறித்த கவலைகளை தூண்டியுள்ளது. வியூக மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் நடத்திய ஓர் ஆய்வும், அமெரிக்க இருப்புக்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply