கனடாவில் பள்ளத்திற்குள் விழுந்த பெண் - துணை நின்ற அதிர்ஷ்டம்
கனடா
கனடாவில் பள்ளம் ஒன்றிற்குள் பெண்ணொருவர் விழுந்த நிலையில், அவரை சுற்றிலும் பல ஆபத்துகள் இருந்த நிலையிலும், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அவர்.
சனிக்கிழமை மாலை, கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த கிறிஸ்டைன் (Christine Keilback), தனது நண்பர்களான லிண்டா மற்றும் ஜெஃப் ரீகனுடன் (Lynda and Jeff Regan) திரைப்படம் ஒன்றைப் பார்க்க அவர்களுடைய காரில் சென்றுள்ளார்.
திரைப்படம் முடிந்து அவரது நண்பர்கள் அவரை வீட்டினருகே இறக்கிவிட்டுள்ளார்கள்.
காரிலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்துகொண்டிருந்த கிறிஸ்டைன், திடீரென மாயமாகியுள்ளார். காரிலிருந்த லிண்டாவும் ஜெஃபும் தங்கள் தோழியைக் காணாமல் திகைத்துள்ளார்கள்.
ஒருவேளை கிறிஸ்டைன் கால் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டாரோ என பார்ப்பதற்காக இருவரும் காரிலிருந்து இறங்கி கிறிஸ்டைனைத் தேட, தரையில் கிறிஸ்டைனின் தலை மட்டும் தெரிந்துள்ளது.
நடந்தது என்னவென்றால், தரையிலிருந்த பள்ளம் ஒன்றிற்குள் விழுந்து மாட்டிக்கொண்டுள்ளார் கிறிஸ்டைன்.
அவரால் வெளியே வரவில்லை என்பது தெரிந்ததும், புத்திசாலித்தனமாக எங்கோ சென்று ஒரு துடைப்பம் மற்றும் மண் அள்ளும் கருவியையும் எடுத்துவந்த ஜெஃப், அவற்றை கிறிஸ்டைனின் அக்குள் பகுதியில் வைத்து, அவர் பள்ளத்துக்குள் சென்றுவிடாமல் தடுத்துள்ளார்.
உடனடியாக அவர் அவசர உதவியையும் அழைக்க, 10 நிமிடத்தில் அங்கு வந்த மீட்புக்குழுவினர் கிறிஸ்டைனை மீட்டுள்ளனர்.
விடயம் என்னவென்றால், கிறிஸ்டைன் விழுந்த பள்ளத்தில் ஒருபக்கம் ஒரு கூர்மையான உலோகத்துண்டு நீட்டிக்கொண்டிருந்திருக்கிறது.
அவரது வயிற்றுப்பகுதியில் ஒரு பெரிய குழாய் நீட்டிக்கொண்டிருந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த உலோகத்துண்டு அவரது உடலைக் கிழிக்கவும் இல்லை, விழும்போது அவர் அந்தக் குழாயில் மோதவும் இல்லை.
40 நிமிடங்கள் பள்ளத்துக்குள் சிக்கிக்கொண்டிருந்தும் தனக்கு அடிபடாததாலேயே தான் பயமோ கவலையோ படாமல் இருந்ததாகவும், புகைப்படத்தில் தான் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் வேடிக்கையாக கூறுகிறார் கிறிஸ்டைன்.
இன்னொரு விடயம் என்னவென்றால், யாராவது சிறுபிள்ளையோ அல்லது செல்லப்பிராணியோ அந்தப் பள்ளத்தில் விழுந்திருந்தால் நிலைமை மோசமாகியிருந்திருக்கலாம் என்கிறார் அவர்.
இதற்கிடையில், அதிகாரிகள் அந்தப் பகுதியை பொறுப்பில் எடுத்து, அப்படி ஒரு குழாய் இருக்குமானால், அதற்கு எதிர்புறமும் இதேபோல் ஒரு குழாய் இருக்கக்கூடும் என சரியாக கணித்து தேடி, மறுப்பக்கமும் இதேபோல் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டுபிடித்து அவை இரண்டையும் சரி செய்யும் முயற்சியைத் துவங்கியுள்ளார்கள்.





















