சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து
இலங்கை
மொரட்டுவை பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து மொரட்டுவை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதன் சாரதிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் மறுபக்கத்திற்குத் தாவிச் சென்றுள்ளது.
அங்கிருந்த வீடொன்றின் மீது மோதி பேருந்து நின்றதையடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது பேருந்துக்குள் இருந்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த போது, அந்த வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும், நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பவம் தொடர்பாக மொரட்டுவை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சாரதியின் உடல்நிலை மற்றும் விபத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்துப் பொலிஸார் அறிக்கையிட்டுள்ளனர்.






















