விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை - எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை
இலங்கை
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவை தனது கட்சி உறுப்பினர் பதவியைத் துறக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கேட்டுக்கொண்டுள்ளது.
செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுவிலிருந்து எரான் விக்ரமரத்னவின் இராஜினாமாவை கட்சி ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அவர் கட்சியிலிருந்து முழுமையாக விலக வேண்டும் என்றும் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
விளையாட்டு நிர்வாக அமைப்புகளில் அரசியல்வாதிகள் பதவிகளை வகிக்க அனுமதிக்காத SJB-யின் கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிரிக்கெட் அமைப்பில் நிர்வாக மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்காலக் குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நேற்று (29) விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவால் நியமிக்கப்பட்டார்.
ரோஷன் மகாநாம, குமார் சங்கக்கார, துஷீர ரதெல்ல, சிதாத் வெட்டிமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாஃப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் தினால் பிலிப்ஸ் ஆகியோர் ஒன்பது பேர் கொண்ட குழுவின் எஞ்சிய உறுப்பினர்களாவர்.
நாட்டின் கிரிக்கெட் அமைப்பை மறுசீரமைத்து மேம்படுத்தும் பணி இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை இந்தக் குழு செயற்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.






















