என் பொறுமை எல்லை கடக்கிறது - ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
இலங்கை
ஈரானுடன் நிலவி வரும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லையை எட்டிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து பீஜிங்கில் இருந்து புறப்படும் முன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைத் தணிப்பதற்காக ஈரான் உடனடியாக ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை, எரிசக்தி விநியோக தடைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணையை திறந்த நிலையில் பேணுவது அவசியம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக சீனாவின் ஒத்துழைப்பை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.























