நான் இல்லாமல் போனாலும் எனது பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்- இளையராஜா
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, 1976-ம் ஆண்டு வெளியான 'அன் னக்கிளி' படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தவகையில் சினிமாவில் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை இளையராஜா கடந்திருக்கிறார்.தனது இசைப்பயணம் குறித்து இளைய ராஜா பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வருடங்கள் தான் ஒவ்வொன்றாக நகர்ந்து செல்கிறது. நான் அப்படியே தான் இருக்கிறேன். எல்லோரும் என்னை இசை கடவுளாக பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி பார்க்கிறார்கள். கடவுளுக்கு, தான் கடவுள் என்ற நினைப்பு இருக்குமா? அப்படித்தான் இதுவும். அவர்கள் விருப்பம் போல பார்த்துக் கொள்ளட்டுமே... இதில் எதுவும் கூடி விடப் போவதில்லை.
ரசிகர்கள் தனது அன்பை காட்டுகிறார்கள் அவ்வளவுதான். கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுகிறோம். ஆனால் கற்பூரம் காட்டும்போது கூட நமது மனது எங்கோ அலைபாய்கிறது.
கற்பூர ஆரத்தி காட்டும் நேரத்தில் கூட அடக்க முடியாத மனதை, 'ஜனனி... ஜனனி...' பாடல் கட்டுப்படுத்துகிறது. அந்த அமைதியை எனது பாடல் தருகிறது. நான் இல்லாமல் போனாலும்கூட, எனது பாடல்கள் தரும் கொண்டாட்டம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
விரைவில் எனது 2-வது சிம்பொனியும் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.






















