இலங்கை வந்த சீன பெண் வர்த்தகரால் பரபரப்பு - அதிகாரிகளின் அதிரடியால் அம்பலமான தகவல்
இலங்கை
சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண் ஒருவர், நேற்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய சீன நாட்டு வர்த்தகப் பெண் எனக் கண்டறியப்பட்டுள்ளார்
இந்தப் பெண் சிகரெட்டுகளை சீனாவில் கொள்வனவு செய்துள்ளார். சுங்க அதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, அவர் சீனாவிலிருந்து நேரடியாக வராமல் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து தாய் ஏர்வேஸின் TG-307 என்ற விமானம் மூலம் இன்று (15) அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 33,600 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 168 சிகரெட் கார்ட்டூன்கள் இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண்ணைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






















