ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தீவிரம் - ஈரான் முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்
ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தன.
இந்த மோதல் தீவிரமடைந்ததையடுத்து, உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஈரான் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் நாட்டுடன் இணைந்து கூட்டாக நிர்வகிக்க ஈரான் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், “சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
அதை நிர்வகிப்பது தொடர்பான ஈரானின் முன்மொழிவை நான் நிராகரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “ஓமனும் மற்ற நாடுகளைப் போலவே நடந்துகொள்ள வேண்டும்.
இல்லையெனில், அவர்களையும் நாம் தகர்க்க வேண்டியிருக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடாகக் கருதப்படும் ஓமனுக்கு டிரம்ப் விடுத்த இந்த எச்சரிக்கை, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















