• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அட்டமஸ்தானத்திற்கு புதிய தற்காலிகப் பொறுப்பாளர் நியமனம் - மல்வத்து மகா விகாரை அதிரடி அறிவிப்பு

இலங்கை

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் (அட்டமஸ்தான பௌத்த வழிபாட்டுத் தலங்கள்) பணிகளைத் தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வணக்கத்திற்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மல்வத்து மகா விகாரை இன்று (30) அறிவித்துள்ளது.

இவர் வடமத்திய மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கராகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேய (ருவன்வெலி சைத்தியாராமாதிகாரி) விகாரையின் விஹாராதிபதியாகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மல்வத்து மகா விகாரைப் பிரிவின் கண்டி வலயத்தின் பிரதம சங்கநாயக்கரும், தற்போதைய அட்டமஸ்தானாதிபதியுமான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராகச் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அட்டமஸ்தானாதிபதிக்கு எதிரான இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து இறுதித் தீர்மானம் ஒன்று எட்டப்படும் வரை, அட்டமஸ்தானத்தின் தினசரி வழிபாட்டு மற்றும் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடப்பதற்காக இந்த புதிய தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மல்வத்து பார்சுவத்தின் பொதுச்செயலாளர், கலாநிதி வணக்கத்திற்குரிய பஹமுணே சுமங்கல நாயக்க தேரரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply