கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு
இலங்கை
மாத்தறை, கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மீனவ மக்களுக்கு விரைவாகவும் வினைத்திறனாகவும் சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் நேற்று (29) முற்பகல் 8:30 மணியளவில் கந்தறை மீன்பிடித் துறைமுக வளாகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதோடு, திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார். 13,400 மில்லியன் ரூபாய் பாரிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் பணிகளை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்து மக்கள் பாவனைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுக வளாகத்தில் பிரதேச கிராமிய மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதி அமைச்சர், அவர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
இதன்போது மீனவ சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 9:30 அளவில் தெவிநுவர பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சரின் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
கந்தறை மீன்பிடித் துறைமுகத்தில் மேலதிக அலைதாங்கி (Breakwater) ஒன்றை அமைப்பது தொடர்பாக LHI நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடம் இதன்போது மீனவ சமூகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த வரைபடம் தொடர்பில் மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், அதற்காக அனைத்துத் தரப்பினரினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் லங்கா ரமநாயக்க, அபிவிருத்தி பணிப்பாளர் யசிந்தா குணவர்தன, இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் சட்டரீதியான கூட்டுத்தாபனத்தின் பிரதி பொது முகாமையாளர் பிரபாத் ரணவீர, மாத்தறை மாவட்ட உதவி கடற்றொழில் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், தெவிநுவர பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





















