தீவிபத்தில் சிக்கிய இளம்பெண்ணுக்கு வித்தியாசமான ஒரு சிகிச்சை
இலங்கை
கனடாவில், உலகிலேயே முதல் முறையாக, தீவிபத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவருக்கு தோல் மாற்று சிகிச்சை இல்லாமல் தீக்காயத்துக்கு ஒரு வித்தியாசமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த வெஸ்டர்ன் பல்கலை மாணவியான கெய்ட்லின் ஜெஃப்ரி (18), தீவிபத்தொன்றில் சிக்கினார்.
அவரது முகம் மற்றும் கழுத்தில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் ஹாமில்ட்டன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது காயங்களுக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக புதியதொரு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதாவது, எக்சோஸோம் (exosomes) என்னும் செல் உள்ளுறுப்புகளை பயன்படுத்தி கெய்ட்லினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக இந்த எக்சோஸோம் சிகிச்சை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், இதுவரை நடைமுறையில் அவை மனித உடலில் தீக்காயத்துக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாக கெய்ட்லினுக்கு எக்சோஸோம்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விடயம் என்னவென்றால், தீக்காயத்துக்கு எப்படிப்பட்ட சிறந்த தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும், அதனால் ஏற்பட்ட வடுக்களை முழுமையாக மறைக்க முடியாது.
இந்நிலையில், எக்சோஸோம் சிகிச்சைக்குப் பிறகு கெய்ட்லினின் முகம் முன்னிருந்ததுபோலவே அழகாக ஆகிவிட்டது.
இது உண்மையாகவே ஒரு அற்புதம் என்று கூறும் கெய்ட்லின், தீக்காயம் உடலில் மட்டும் காயத்தை ஏற்படுத்துவதில்லை, அது மனதிலும் காயத்தை ஏற்படுத்திவிடக்கூடியது.
அதனால் ஏற்படும் ஆழ்ந்த தாக்கம் மன நலனையும் பாதிக்கும். அதை நான் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டியிருந்திருக்கும் என்று கூறும் கெய்ட்லின், இந்த சிகிச்சை, வாழ்வில் அடுத்த அடி முன்னோக்கி எடுத்து வைக்க உதவியுள்ளது என்கிறார்.























