• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டின் வறுமைக் கோடு உயர்ந்தது - கொழும்பு முதலிடத்தில்

இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 2026 ஜூன் மாதத்தில் ரூ.17,592 ஆக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

மே மாதத்துடன் ஒப்பிடுகையில், உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ரூ.277 அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் அது 17,315 ரூபாவாக காணப்பட்டது.

ஒரு நபர் தனது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்திர அடிப்படையில் குறைந்தபட்சமாக தேவைப்படும் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக் கோடாகக் கருதப்படுகிறது.

குறைந்தபட்ச உணவு மற்றும் உணவு அல்லாத நுகர்வுப் பொருட்களின் செலவின அடிப்படையில் இது கணக்கிடப்படுவதுடன், விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகிறது.

மாவட்ட வாரியான தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் கோடு ரூ.18,973 ஆக பதிவாகி நாட்டிலேயே அதிகபட்சமாக காணப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் ரூ.18,876 ஆக பதிவாகியுள்ளது.

மாறாக, மொனராகலை மாவட்டத்தில் ரூ.16,821 ஆக பதிவாகி நாட்டிலேயே குறைந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோடு காணப்பட்டுகிறது.

உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில், தேசிய வறுமைக் கோட்டிலும் உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் வாழ்க்கைத் தரம், வறுமை நிலை மற்றும் வாழ்க்கைச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய குறியீடாக உத்தியோகபூர்வ வறுமைக் கோடு கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply