முடிவுக்கு வந்த நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை
சினிமா
இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கி வந்தார். மேலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருவரும் கவனம் பெற்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இதனை தொடர்ந்து, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 27-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நவம்பர் மாதம் 27-ந்தேதி நீதிபதி சுபாதேவி வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில், 'நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி நடைபெற்ற இவர்களது திருமண பதிவு ரத்து செய்யப்படுகிறது' என கூறினார். இந்த தீர்ப்பின் மூலம் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.






















