மிக வலிமையான ஆயுதத்தை உருவாக்கியுள்ள சீனா - மறைமுகமாக உதவும் அமெரிக்கா
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான Anthropic நிறுவனத்தின் திறன்களுக்கு இணையாகத் தனது இணையப் பாதுகாப்புத் திறன்களை வளர்த்துக்கொண்டதன் மூலம், செயற்கை நுண்ணறிவு (AI) போட்டியில் அமெரிக்காவை சீனா நெருங்கி வருகிறது.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், மென்பொருள் பிழைகளைக் கண்டறிவதில், அமெரிக்கப் போட்டியாளருக்கும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களான 360 Security Technology மற்றும் 'Z.ai' ஆகியவற்றுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளது என்றே தெரிய வருகிறது.
360 செக்யூரிட்டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷோ ஹோங்கியி, சீனத் தலைநகரில் நடைபெற்ற இணையப் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகையில், Tulongfeng எனப்படும் தங்கள் நிறுவனத்தின் பிழை கண்டறியும் கருவியானது, அதே பணியைச் செய்யும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் Mythos-க்கு தற்போது இணையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், சைபர் போரின் போக்கையே மாற்றக்கூடிய இத்தகைய சக்திவாய்ந்த ஆயுதம் அமெரிக்காவின் கைகளில் மட்டுமே இருப்பது முறையல்ல என்று ஷோ கூறியுள்ளார்.
இந்தத் துறையில் சீனத் தொழில்நுட்பம் முன்னேறி வந்தாலும், ஆந்த்ரோபிக்கின் தயாரிப்பு வரிசையில் இடம்பெற்றுள்ள ChatGPT போன்ற OpenAi தயாரிப்புகள் உட்பட, மற்ற துறைகளில் சீனா இன்னும் பின்தங்கியே உள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிடுவது போன்றதொரு நல்லுறவை பேணி வந்தாலும், இவ்விரு வல்லரசுகளுக்கும் இடையிலான போட்டி பதற்றமான நிலையிலேயே நீடிக்கிறது.
இதனிடையே, பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், புதிய 'ஆந்த்ரோபிக்' (Anthropic) அமைப்புகளைப் பொதுமக்கள் அணுகுவது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஆனால், அமெரிக்க மாதிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் உண்மையில் சீனாவிற்கு ட்ரம்ப் நிர்வாகம் மறைமுகமாக உதவுகிறது என்றே விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதன் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என கூகுள் மற்றும் ஸ்ட்ரைப் (Stripe) நிறுவனங்களில் பாதுகாப்புப் பணிக் குழுக்களுக்குத் தலைமை தாங்கிய ஆராய்ச்சியாளரான நீல்ஸ் ப்ரோவோஸ் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில், தனது புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியின் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதாக ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சைபர் பாதுகாப்பு அபாயங்களுக்காக செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளை அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆய்வு செய்யும் செயல்முறையின் சமீபத்திய நிகழ்வு இதுவாகும்.
OpenAI நிறுவனத்தின் முக்கியப் போட்டியாளரான ஆந்த்ரோபிக், சில மணிநேரங்கள் கழித்து, தனது மிகவும் வலிமையான இணையப் பாதுகாப்பு மாதிரியின் வரையறுக்கப்பட்ட வெளியீட்டிற்கு ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தது.
வர்த்தகத் துறை அதை நடைமுறையில் தடை செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இரு நிறுவனங்களும் தங்களின் புதிய மாதிரிகள், நம்பகமான பங்குதாரர்களின் சிறிய குழுக்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவித்தன.
இந்த நிலையில், GPT-5.6 Sol எனப்படும் தங்களது புதிய செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வெளிநாட்டினர் பயன்படுத்துவதைத் தடுக்கும் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு இணங்க, Fable 5 மற்றும் Mythos 5 ஆகிய இரண்டு புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே Anthropic நிறுவனம் அவற்றைச் செயல்பாட்டிலிருந்து நீக்கியது.
இதனிடையே, ட்ரம்ப் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று, அந்த மாதிரிகளில் ஒன்றான மைத்தோஸ் 5 மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது.
அத்துடன், வேகமாக வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக, முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.






















