அவுஸ்திரேலியாவில் 18,000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் - இந்தியா முதியவர் சாதனை
இலங்கை
அவுஸ்திரேலியாவில் தனது பேரனுடன் இணைந்து 18,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அங்கித் என்ற இளைஞருக்கு ஸ்கை டைவிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் என்பதால், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், ஏற்கனவே தனது 80 வயது தாத்தாவுடன் இணைந்து 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்திருந்தார்.
எனினும் அதன் தொடர்ச்சியாக, இந்த முறை இன்னும் ஒரு படி மேலே சென்று 18,000 அடி உயரத்தில் இருந்து குதிக்க இருவரும் முடிவு செய்துள்ளனர். மேலும்,ஸ்கை டைவிங் செய்வதற்காக விமானத்தில் ஏறும் முன்பாக, அங்கித் தனது தாத்தாவிடம் "பயப்பட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
அதற்கு சற்றும் அஞ்சாத அந்த முதியவர், "யார் பயந்தது?" என்று கம்பீரமாகக் கேட்டுவிட்டு, பேரனுடன் இணைந்து விமானத்தில் இருந்து துணிச்சலாகக் குதித்துள்ளார். இந்நிலையில்,இருவரும் பெரசூட் உதவியுடன் வானில் பறந்து, வெற்றிகரமாகத் தரையிறங்கினர்.
தரையை அடைந்தவுடன், கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி அந்த தாத்தா, மிகுந்த தேசபக்தியுடனும் உற்சாகத்துடனும் "ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் ஹரியானா!" என முழக்கமிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.























