யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு
இலங்கை
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் சர்வதேச நீர் முகாமத்துவ நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர், விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி என்பன அனைத்தும் நிலத்தடி நீர்வளத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது ஒரு சுற்றுச்சூழல் நடவடிக்கை மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் தேசியப் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்நிகழ்வில் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியாளர்கள், துறைசார் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






















