• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்

இலங்கை

2026 கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தகவல் முகாமைத்துவ முறைமை பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா 2026.08.18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி, 2026.08.28 ஆம் திகதி வரை நகர்வலம் நடைபெறவுள்ளது. 

இதனை முன்னிட்டு இலங்கை பொலிசாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கமைய, வீதித் தடைகள் ஏற்படுத்துதல், பாதுகாப்புக் கடமைகள், வாகனங்கள் மற்றும் தனிநபர்களைச் சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல், வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தகவல் முகாமைத்துவ முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இம் முறைமையின் ஊடாக கண்டி எசல பெரஹெராவைக் கண்டுகளிப்பதற்காக வருகை தரும் பக்தர்ர்கள், பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் பின்வரும் விடயங்கள் தொடர்பான நேரடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடங்கள் தொடர்பான தகவல்கள்

பெரஹெரா ஊர்வலமாக பவனிவரும் வீதிகள்.

பெரஹெராவைக் கண்டுகளிப்பதற்குப் பொருத்தமான இடங்கள்

சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

வழிதவறியவர்களைத் தொடர்புகொள்ளக்கூடிய இடங்கள்

இம் முறைமைக்குள் பிரவேசிப்பதற்கான வழிமுறைகள்

இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இற்குள் பிரவேசித்து, “கண்டி எசல பெரஹெரா” என்ற இணைப்பைத் தெரிவு செய்வதன் மூலம் இந்த முறைமைக்குள் பிரவேசிக்க முடியும். TravelGuides & Travelogues

பெரஹெராவை முன்னிட்டு விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள kandyesalaperahera.police.lk இணையத்தளத்தின் ஊடாகவும் உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களும் பக்தர்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, நிகழ்நேரத் தகவல்களின் அடிப்படையில் விரைவானதும் இலகுவானதுமான சேவையைப் பெற்றுக்கொண்டு தமது நேரத்தைச் சேமித்துக்கொள்ள முடியும்.

மேலும், அனைத்து இடங்களிலும் கையடக்கத் தொலைபேசி, டெப் கணினி அல்லது கணினி ஊடாக இச் சேவையைப் பயன்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரஹெரா காலப்பகுதியில் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இம் முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பெரஹெராவைக் கண்டுகளிப்பதற்காக வருகை தரும் போது இச் சேவையைப் பயன்படுத்தி தமது பயணத்தை இலகுவாகவும் வசதியாகவும் திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

Leave a Reply