சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்க திட்டம்
இலங்கை
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்குவது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் . அனுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்தாய்வில், சீன நிறுவனமான ஈஹாங்கின் பிரதிநிதிகள், அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தச் சேவையானது சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்லாமல், அவசரகால சேவைகள் மற்றும் கடல்சார் துறையின் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.
ஈஹாங் நிறுவனத்தின் பிரதிநிதிகள், E VTOL என அழைக்கப்படும் மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறங்கும் விமானங்கள் குறித்த தகவல்களையும் வழங்கினர்.
இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த விமானங்கள், 16 சுழலி விசிறிகளைக் கொண்டுள்ளதுடன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானாகவே கட்டுப்படுத்தப்படக்கூடியவை.
இருப்பினும், வணிகச் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு, விமானப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை கட்டமைப்பு, வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, அவசரகால நடவடிக்கைகள், இணைய மற்றும் தரவுப் பாதுகாப்பு, அத்துடன் தரையிறங்கும் தளங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் பெறுவது கட்டாயமாகும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சிகிரியா, பிதுரங்கல, கொழும்பு மாநகரம் மற்றும் துறைமுக மாநகரம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தச் சேவையைப் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
துறைமுக மாநகரத்தில் இந்த விமானங்களுக்கென ஒரு முன்னோட்ட மண்டலத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறு குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.





















