இலங்கை ஊடக வரலாற்றில் புதிய மைல்கல்! தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சாதனை
இலங்கை
இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் நாட்டின் பல மாவட்டங்களை சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் , தொலைபேசிகள் வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் படைத்துள்ளது.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை தனியார் ஹோட்டலில் நேற்று (16-08-2026) ஆம் திகதி இடம்பெற்றது.
இதில் லண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும் 25 ஊடகவியலாளர்களுக்கு செல்போன்களும் என சுமார் 1.5 கோடி ரூபா மதிப்புள்ள இலத்திரனியல் உபரணங்களை வழங்கி இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன் மற்றும் செயலாளர் கே.ஜெயந்திரன் ஆகியோர் தலைமையில் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி பவானி குகப் பிரியாவின் நெறியாள்கையில் தியாகராஜ கலைக்கோவில் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக லண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸ் பங்கேற்றார்.
சீவரட்ணம் முறேஸின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு ஆளுயர மலர்மாலைகள் மற்றும் தலைக்கிரீடம் அணிவிக்கப்பட்டும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டதுடன் அவரின் சமூக சேவைகளை பாராட்டி பாராட்டுக் கவிதை காணொளியும் வெளியிடப்பட்டது.
அவர் தனது உரையின்போது தான் சிறு வயதில் பட்டதுன்பங்கள், வறுமையில் வாடிய தனது தாயார் தன்னை வளர்க்க பட்ட கஷ்டங்களை மிகவும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியான எம்.செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளரும் முரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.வித்தியாதரன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.வீரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன் முன்னாள் பிரதம ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்றிருந்த இந்நிகழ்விலேயே லண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் நாட்டின் பல மாவட்டங்களையும் சேர்ந்த 90 தமிழ் ,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





















