• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஸ்வெசும திட்டம் தொடர்பான அறிவிப்பு

இலங்கை

‘அஸ்வெசும’ (Aswesuma) திட்டத்தின் அடுத்த கட்டத்தின் கீழ், ஏழை மற்றும் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமே நலன்புரி உதவித்தொகை வழங்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அஸ்வெசும நலத்திட்டம் இந்த ஆண்டு தனது இரண்டாம் கட்டத்தில் நுழையவுள்ள நிலையில், அதிகாரிகள் தற்போது பயனாளிகளின் விவரங்களைப் புதுப்பித்து வருகின்றனர்.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 16 லட்சம் பயனாளிகள் உதவிகளைப் பெற்றனர். 

இருப்பினும், இடைநிலை குழு (Transitional group) என வகைப்படுத்தப்பட்ட நான்காவது பிரிவைச் சேர்ந்த 3,15,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் ஏப்ரல் 2025 இல் நிறுத்தப்பட்டன.

மேலும், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது பிரிவைச் சேர்ந்த 4,25,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் மீளாய்வுச் செயல்முறைக்குப் பின்னர் வறுமை அல்லது தீவிர வறுமை நிலையில் வாழ்வது கண்டறியப்பட்டால், முன்னதாக ‘பாதிக்கப்படக்கூடிய’ மற்றும் ‘இடைநிலை குழு’ பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் மீண்டும் சலுகைகளைப் பெறத் தகுதிபெறுவார்கள் என்று நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a Reply